Tuesday, March 13, 2007

மொழி - என் பார்வையில்


"அன்பே சிவம்" படம் பார்த்த பின் இப்படி ஒரு மனநிறைவு கிடைத்தது, நம் நாட்டில் இத்தகைய தரமான திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

இப்போது "மொழி" திரைப்படத்தை பார்த்த பின் அதே உணர்வு, நிறைந்த மனதோடு திரையரங்கத்தை விட்டு வெளியேறினேன்.

"சந்தோஷம்" அதுவே படம் முழுவதும் நிறைந்திருந்தது. திரைக்கதையில் சில கணத்தக் காட்சிகள் கூட காதலினால் ஏற்படும் சுகமான வேதனைகளே.

பொதுவாக கல்லூரி நாட்கள் முடிவடையும் தருவாயில் எல்லோரும்
"Slam Book" எனப்படும் நினைவுப்பதிவு புத்தகத்தில் தங்கள் நண்பர்களைப் பற்றிய விவரங்களை சேகரிப்பது வழக்கம், அதில் "Favourite Movies" என ஓர் பகுதி காணப்படும். அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு மிகப்பிடித்தமான (அ) தங்கள் மனதைக் கவர்ந்த திரைப்படங்களை குறிப்பிடுவார்கள், இனி வரும் நாட்களில் பலர் தங்களது "Favourite Movie" யாக 'மொழி" திரைப்படத்தைக் குறிப்பிடுவார்கள் என எனக்கோர் ஆணித்தரமான நம்பிக்கை.


இப்படத்தை பார்க்கும்போது எனக்குள் ஓர் ஆரோக்கியமான குற்ற உணர்வு ஏற்பட்டது. நான் பணிபுரியும் அலுவலகத்தில் இத்திரைப்படத்தில் வரும் அர்ச்சனா (ஜோதிகா) போல வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத சிலர் உள்ளனர், இவர்களோடு நான் அதிக நேரம் செலவிடவில்லையே என்ற குற்ற உணர்வே அது. நேற்று வரை அவர்களின் சைகை மொழி தெரியாது. ஆனால் இன்று "A - Z" எப்படி சைகை செய்வது என்று அவர்களில் ஒருவரிடம் கற்றுக்கொண்டேன்.

மேலும் இம்மொழியை நன்றாகப் பயிற்சி செய்து அவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

"The One Who Saves One Life, Saves The World Entire" என "Shindler's List" எனப்படும் உலகப் புகழ்பெற்ற திரைப்படத்தில் மையக்கருத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் பார்க்கையில் ஓர் சாதாரண மனிதனான எனக்குள், ஓர் நாளில் இத்திரைப்படம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமெனில், இத்திரைப்படம் சமுதாயத்தில் ஒரு ஆரோக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இத்தகைய உயர்ந்த உன்னதமான சிந்தனைக்கு இயக்குநர் ராதாமோகனுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இத்தகைய சிறந்த திரைப்படத்தை உருவாக்க ஆயுதமாய் இருந்த தயாரிப்பாளர் "பிரகாஷ் ராஜ்"அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இத்திரைப்படம் பல சிறந்த விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன். .!

முதற்வணக்கம்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என் வணக்கங்கள்.